ஜூலை, 2021 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூலை 2021

கிறிஸ்துவில் விலையேறப்பெற்ற வாழ்வு

தொலைந்த என் நிச்சயதார்த்த மோதிரத்தை, கண்களில் நீர்வழிய கண்மூடித்தனமாய் தேடினேன். மெத்தைகளை புரட்டிப்பார்த்து, இங்கும் அங்கும் எல்லா மூலைகளிலும் தேடிய என்னுடைய கணவர் ஆலன், “பரவாயில்லை, நாம் வேறொன்றை வாங்கிக்கொள்ளலாம்” என்றார். 

“நன்றி,” என்று சொன்னேன். “ஆனால் அதின் விலைமதிப்பைத் தாண்டி, அதில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பு இருக்கிறது.” அதை மற்றொன்றைக்கொண்டு ஈடுசெய்யமுடியாது. அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்தேன். “தேவனே, தயவுசெய்து அதை கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்யும்.” 

ஒருசில நாட்களுக்குபின், அந்த விலைமதிப்பற்ற மோதிரத்தை என்னுடைய ஸ்வெட்டர் ஒன்றின் பாக்கெட்டில் கண்டெடுத்தேன். “நன்றி இயேசுவே” என்று மகிழ்ச்சியடைந்தேன். நானும் எனது கணவரும் மகிழ்ச்சியடைந்த தருணத்தில், வேதாகமத்தில் வெள்ளி நாணயத்தை தொலைத்த ஸ்திரீயைக் குறித்த உவமை எனக்கு நினைவுக்கு வந்தது (லூக்கா 15:8-10). தொலைந்த வெள்ளி நாணயத்தைத் தேடிய ஸ்திரீயைப் போல, தொலைந்த மோதிரத்தின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது. எங்களுடைய விலைமதிப்புள்ள ஒன்றைத் தேடும் எங்களின் முயற்சி தவறல்ல. இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தி, தான் சிருஷ்டித்த ஒவ்வொரு நபரையும் இரட்சிக்கும் அவரது ஆவலை வெளிப்படுத்துகிறார். ஒரு பாவியின் மனந்திரும்புதலினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாகிறது. 

தொலைந்துபோன பொருளைத் தேடுவதுபோன்று, மற்றவர்களுக்காக வாஞ்சையோடு ஜெபிக்கிற நபராய் மாறுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஒருவர் மனந்திரும்பி, தன்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புவிப்பது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! நாம் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும்போது, தொலைந்துபோன நம்மை விடாமல் தேடிக் கண்டுபிடித்ததின் சந்தோஷத்தை நாம் அனுபவிக்கமுடியும். நம்மை தேடிக் கண்டுபிடிக்குமளவிற்கு நாம் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள். 

பொறாமையை மேற்கொள்ளுதல்

பிரபல ஆங்கிலத் திரைப்படமொன்றில், வயதுமுதிர்ந்த இசைவாத்தியக் கலைஞர் ஒருவர் அந்த குறிப்பிட்ட நிகழ்விற்கு வந்திருந்த பாதிரியாருக்கு தன்னுடைய இசைகளில் சிலவற்றை பியானோவில் வாசித்துக் காண்பித்தார். சங்கடப்பட்ட பாதிரியார், அந்த இசை தனக்கு பிடிபடவில்லை என்றார். “இது எப்படியிருக்கிறது?” என்று எல்லோருக்கும் பரீட்சையமான ஒரு இசையை வாசித்துக் காண்பித்தார். இது உங்களுடையதா என்று அவர் கேட்க, வெறுமனே “இல்லை” என்று பதிலளிக்கிறார். ஆனால் அது பிரபல மொசார்த்தின் இசை என்பதை எளிதில் மக்கள் புரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவர் அதை வாசித்தது, அந்த பிரபல இசைக்கு காரணமான மொசார்த்தின் மரண நிகழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மொசார்த்தின் வெற்றியின் மீது அவர் கொண்ட பொறாமை அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. 

மற்றுமொரு பொறாமைக் கதையின் அடிப்படையாக ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. தாவீது கோலியாத்தை வெற்றிகொண்ட பின், மக்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” (1 சாமுவேல் 18:7) என்று மகிழ்ச்சியோடு பாடினர். இந்த ஒப்பிடுதல் சவுல் ராஜாவுக்கு திருப்தியாயில்லை. தாவீதின் வெற்றியின் மீது பொறாமைக் கொண்டு, தன்னுடைய ராஜ்யத்தை இழக்க நேரிடுமோ என்று பயந்த சவுல் (வச. 8-9), தாவீதைக் கொலை செய்வதற்காக நீண்ட முயற்சியை ஏறெடுக்கிறான். 

இந்த மூத்த இசைக்கலைஞரைப் போல, அதிகாரத்திலிருந்த சவுலைப் போல, நம்மைவிட திறமையானவர்களைச் சந்திக்கும்போது நாம் பெறாமைப்பட நேரிடலாம். அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவதையும் அவர்களின் வெற்றியை அற்பமாய் எண்ணுவதையும் விட்டுவிட்டு, நம்முடைய பொறாமையை மேற்கொள்ள பழகுவோம். 

சவுல் ராஜாவாக தெய்வீகமாய் தேர்ந்தெடுக்கப்பட்டான் (10:6-7, 24). அந்த தெரிந்தெடுத்தல் அவனுக்குள் பொறாமையை அல்ல, மாறாக, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். நம்முடைய அழைப்பும் பிரத்யேகமானது என்பதினால் (எபேசியர் 2:10), மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்துவதின் மூலம் பொறாமையை மேற்கொள்ளலாம் முயற்சிக்கலாம். அதற்கு பதிலாக, மற்றவர்களுடைய வெற்றியில் மகிழலாம். 

இயேசுவே நம் சமாதானம்

டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம். 

டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம். 

உறுதியான தேவ அன்பு

அலிசா மென்டோசாவுக்கு 2020இல் அவளுடைய அப்பாவிடமிருந்து ஒரு ஆச்சரியமூட்டும் மின்னஞ்சல் வந்திருந்தது. அவர்களுடைய 25ஆம் திருமண நாளில் அவளுடைய அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் அதைக் கண்டு அவள் ஆச்சரியப்பட்டாள்? ஏனெனில் பத்து மாதங்களுக்கு முன்னரே அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அவர் வியாதியாயிருக்கும்போதே தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து, அந்த மின்னஞ்சலை குறிப்பிட்ட தேதிக்கு போய்சேரும்படி ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அறிந்துகொண்டாள். அத்துடன், இனி வரப்போகிற தன்னுடைய மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் ஆகிய அனைத்திற்கும் பூங்கொத்து பரிசளிக்கும்படிக்கும் முன்னமே ஏற்பாடு செய்துவிட்டே இறந்திருக்கிறார். 

இந்த அன்பு, உன்னதப்பாட்டு புத்தகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாயிருக்கிறது. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது” (உன்னதப்பாட்டு 8:6). மரணத்தையும் பாதாளத்தையும் அன்போடு ஒப்பிடுவது சரியில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அவைகளில் சிறைப்பட்டவர்கள் மீண்டு வருவதில்லை. அதேபோன்று உண்மையான நேசமும் தான் நேசித்தவர்களை என்றுமே விடுவதில்லை. 6-7 வசனங்களில் புத்தகம் உச்சநிலை அடைந்து, “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று திருமண அன்பின் மேன்மையை உருவகப்படுத்துகிறது (வச. 7). 

வேதாகமம் முழுவதிலும் கணவன்-மனைவி அன்பு தெய்வீக அன்பிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 54:5; எபேசியர் 5:25; வெளி. 21:2). இயேசுவே மணவாளன், சபையானது அவருடைய மணவாட்டி. கிறிஸ்துவை இந்த உலகத்திற்காக மரிக்க ஒப்பக்கொடுத்ததின் மூலமாய் தேவன் தன் அன்பை நமக்கு காண்பித்துள்ளார். அதினால் இனி நாம் மரிக்க தேவையில்லை (யோவான் 3:16). நாம் திருமணமானவரோ அல்லது தனிநபரோ, ஆனால் தேவனுடைய அன்பு நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு உறுதியான அன்பு. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது.  
ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும்.  
நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம்.

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.